Sunday, December 7, 2014

2. நேற்றை நினைவூட்டிய இன்று

"இன்று ஹார்லிக்ஸ் கொடுத்தீர்களா" என்ற விளம்பரத்தைத் தொலைக்காட்சியில் பார்த்ததும் இது போன்ற இன்னொரு விளம்பரம் - பல ஆண்டுகளுக்கு முன் பார்த்தது நினைவுக்கு வந்தது.

நான் சிறுவனாக இருந்தபோது சில முக்கியமான ரயில் நிலையங்களில் 'இந்த வாரம் ஆனந்த விகடன் வாசித்தீர்களா?' என்று ஒரு பெரிய விளம்பரப் பலகை ரயில் நிலையத்துக்கு வந்து போகிறவர்களைப் பார்த்துக் கேட்கும். அந்த விளம்பரப் பலகைகளில் விகடன் தாத்தாவின் உருவமும் இடம் பெற்றிருக்கும். விகடன் தாத்தாவே நம்மைப் பார்த்து அப்படிக் கேட்பதாகக் கூட வைத்துக் கொள்ளலாம். (இப்போதும் இந்த விளம்பரப் பலகைகள் சில இடங்களில் இருக்கலாம். ஆனால் நான் இதைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகி விட்டன.)

அப்போதெல்லாம் ரயில் பயணம் என்பது அடிக்கடி நடக்கும் விஷயம் இல்லை. அதுவும் குறிப்பாக கிராமத்தில் வளர்ந்த என் போன்றவர்களுக்கு ரயில் பயணம் என்பது எப்போதாவது நிகழ்கிற ஒரு திருவிழா. என் கிராமத்துக்கு அருகில் இருந்த ரயில் சந்திப்பு மாயூரம் (இப்போது மயிலாடுதுறை) எனவே நான் இந்த விளம்பரத்தை அதிகம் பார்த்தது மாயூரம் சந்திப்பில்தான்.

மாயூரம் சந்திப்பு என்றதும் எனக்கு நினைவு வருகிற இன்னொரு விஷயம் அந்த ஸ்டேஷனில் இருந்த IRR உணவு விடுதி. ரயில்வே கான்டீன்களில் கிடைக்கும் உணவின் தரம் பொதுவாக சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாத அந்தக் காலத்தில் மாயூரம் சந்திப்பின் உணவு விடுதிக்கு மிக நல்ல பெயர் உண்டு.

அந்த காண்டீனில் நான் உணவு அருந்திய சந்தர்ப்பங்களும் என் ரயில் பயணங்களைப் போலவே மிகக் குறைவுதான்.எப்போதோ ஒருமுறை என் மிகச் சிறிய வயதில் என் அப்பா வாங்கிக் கொடுத்த சாம்பார் சாதத்தின் ருசி இன்னும் என் நாக்கில் இருப்பதாகத் தோன்றுவது உண்மையா அல்லது பிரமையா என்று தெரியவில்லை.

இப்போது அந்த கான்டீன் பல விதங்களில் மாறியிருக்கும் என்று நினைக்கிறேன்.

'இன்று' என்ற இந்த வலைப் பதிவை 'நேற்றிலிருந்து' துவங்குகிறேன். இன்றைய 'இன்று' கூட நாளைய 'நேற்று'தானே! 

No comments:

Post a Comment