Monday, December 8, 2014

3. சேதன் பகத் மற்றும் பலர்

காலையில் எழுந்ததும் நேற்றைய ஹிந்துவில் (ஞாயிறு பதிப்பு) வந்த சேதன் பகத்தின் பேட்டியைப் படித்தேன். அவர் பேட்டியில் அலட்டல் சற்று அதிகமாக இருந்ததாக எனக்குத் தோன்றியது.

வெற்றி தரும் போதையை வெற்றி கொள்வது எல்லோருக்கும் கைவரக் கூடியதில்லை.முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஒருமுறை கூறியது போல வெற்றியாளர்களை நாம் கேள்வி கேட்க முடியாது (You can't quarrel with success).  மோடி, ஜெயலலிதா போன்ற பலருக்கும் இந்தப் பழமொழி பொருந்தும்!

சேதன் பகத்தின் சமீபத்திய நாவல்  பாதிக் காதலி  (Half Girlfriend- இன்றைய மொழிப் பிரயோகத்தின்படி இதை செமி காதலி என்றும் - ஆங்கிலமும் தமிழும் கலந்து- மொழி பெயர்க்கலாம்!) எனக்கு ருசிக்கவில்லை.

அவருடைய முந்தைய நாவல்களான ஐந்து புள்ளி ஏதோ ஒன்று (Five point something) என் வாழ்க்கையின் மூன்று தவறுகள் (The three mistakes of my life) ஆகிய புத்தகங்களை ரசித்திருக்கிறேன். இவை இரண்டுமே இந்தியில் திரைப்படங்களாக வந்திருக்கின்றன. Five point something  என்ற நாவல் தமிழில் 'நண்பர்கள்' என்ற பெயரில் ஷங்கரின் இயக்கத்தில் வந்திருக்கிறது.

குறிப்பாக Five point something  என்ற நாவலில் இந்தியத் தொழில் நுட்பக் கழகங்கள் (IITs) ஏன் புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கும் பட்டதாரிகளை உருவாக்குவதில்லை என்று சேதன் பகத் எழுப்பும்  கேள்வி பொருள் பொதிந்ததாக எனக்குத் தோன்றுகிறது. ஐ.ஐ.டி. கல்வி அங்கே படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பது சரிதான் - அதுவும் பெரும்பாலும் அமெரிக்காவில்! ஆனால் அது நம் நாட்டுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கிறதா என்ற கேள்வி சங்கடம் ஏற்படுத்தக் கூடியதுதான்.

ஆங்கிலத்தில் எழுதும் இந்தியர்கள் பலரும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது நாம் பெருமைப்படக் கூடிய ஒன்றுதான். எனினும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த R.K.நாராயண், ராஜா ராவ், கமலா மார்க்கண்டேயா, நயன்தாரா சாகல், குஷ்வந் சிங் போன்றவர்கள் எழுத்தாற்றலிலும், படைப்பின் தரத்திலும் பெரிதும் மேலோங்கி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

ஒரு வேளை நான் ஒரு பத்தாம்பசலி (எத்தனை பேருக்கு இந்த வார்த்தையின் பொருள் தெரியும்? - old fashioned என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ்ச்சொல் இதுதான் என்று நினைக்கிறேன்) என்பதால் எனக்கு  அப்படித் தோன்றுகிறதோ என்னவோ! 

No comments:

Post a Comment