Monday, July 13, 2015

13. இரண்டெழுத்து இசை தத்தெடுத்த மூன்றெழுத்து!

உன் இசை கேட்டால் புவி அசைந்தாடும்
இது இறைவன் அருளாகும்!

இன்று காலை எழுந்ததும் நண்பர் முரளி SMS மூலம் அனுப்பியிருந்த துயரச் செய்தியைப் பார்த்தேன். இறப்பை philosophical ஆக எடுத்துக் கொள்வது என் இயல்பு. பதினோரு ஆண்டுகள் முன்பு என் தாயார்  இறந்தபோதும் இது போன்ற மனநிலைதான் எனக்கு இருந்தது. 43 வருடம் முன்பு என் 21ஆவது வயதில் என் தந்தையை இழந்தபோது இருந்த உணர்வுகள் வேறு. அந்த அதிர்ச்சி, நம்ப இயலாத் தன்மை எல்லாம் அந்த மரணத்தோடு போய் விட்டன.

87 வயதில் உலக வாழ்க்கையைத  துறப்பது எதிர்பாராத விஷயம் அல்ல. ஆயினும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல் தேறி உற்சாகமாகப் பாடி மருத்துவர்களையும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த மற்றவர்களையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தவர் மறைந்து விட்டார் என்ற செய்தி அதிர்ச்சியைத்தான் அளித்தது.

ராஜாஜி இறந்தபோது ஜெயகாந்தன் "சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி சம்பூர்ணமாகி விட்டார்" என்று எழுதினார். சம்பூர்ணம் ஆகி விட்டார்' என்றுதான் எம் எஸ் வியைப் பற்றியும் சொல்ல வேண்டும். எளிய குடும்பத்தில் பிறந்து வாழ்க்கையுடன் போராடி, இசைதான் தமக்கு இறைவன் கொடுத்திருக்கும் வரம் என்பதை அறிந்து கொண்டு அந்த இசையை முறையாகப் பயிலும் வாய்ப்பு இல்லாமலேயே தன் சொந்தத் தேடலாலும் முயற்சிகளாலும் மட்டுமே  இசையில் இதுவரை யாரும் எட்டாத பரிமாணங்களை அநாயாசமாகக் கடந்து நம்மையும் பல புதிய உலகங்களுக்கு அழைத்துச் சென்ற இந்த மேதை இன்று இந்த உலகையும் கடந்து சென்றுவிட்டார்.

ராஜாஜியின் மரணம் பற்றி  எழுதிய சுதந்திரப் போராட்ட வீரரும் ராஜாஜியுடன்
நெருக்கமாகப் பழகியவருமான திரு. K. சந்தானம் "Rajai joins the immortals. Conventional words of mourning about his departure will be inappropriate" என்று ஸ்வராஜ்யா பத்திரிகையில் எழுதினார். இதுவும் எம் எஸ் விக்குப் பொருந்தக் கூடிய புகழுரைதான்.

கந்தர்வ இரட்டையர்களில் ஒருவரான எம் எஸ் வி மற்றவரான கண்ணதாசனுடன் இணைந்து விட்டார். இனி இவர்கள் இருவரும் தேவ லோகத்தையும் கந்தர்வ லோகத்தையும் தங்கள் பாடல்களால் உலுக்கிக் கொண்டிருப்பார்கள்.
                                                     Photo Courtesy msvtimes.com

எம் எஸ் வி அமரரான செய்தி கிடைத்ததும் Youtube இல் நான் தொகுத்து வைத்திருக்கும் அவரது  பல பாடல் தொகுப்புகளில் ஒன்றைக் கேட்டேன். 'நெஞ்சம் மறப்பதில்லை,' 'பாவாடை தாவணியில்,' 'சிங்காரப் புன்னகை' போன்ற பாடல்களைக் கேட்டபோது கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அவர் இருந்தபோதும் அவரது பல பாடல்கள் கண்ணீரை வரவழைத்திருக்கின்றனவே! எனவே வித்தியாசம் எதுவும் இல்லை!

இருந்த போதும் அழ வைத்தீர்கள்
இறந்த பிறகும் அழ வைத்தீர்கள்!

எம் ஜி ஆர் மறைந்தபோது தினமலர் போஸ்டரில்
'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்'
என்ற இரண்டு வரிகளை மட்டும் பிரசுரித்திருந்தார்கள்.

மற்ற எவருக்கும் பொருந்துவதை விட இந்தப் பாடல் வரிகள் இந்தப் பாடலுக்கு  இசை அமைத்த இவருக்குத்தான் அதிகமாகப் பொருந்தும்.

4-12-2010 இல் சென்னை இன் ஃபோஸிஸ் அரங்கில் நடந்த msvtimes.com நான்காவது ஆண்டு விழாவில்,  எம் எஸ் வி இசை அமைத்த படங்கள், பாடல்களின் பெயரை வைத்து அவர் முன்னிலையில் அவருக்கு ஒரு கவிதாஞ்சலி  செய்தேன். அந்தப் பாமாலையயே   இந்த இசை மாமேதைக்கு மலர் வளையமாகச் சமர்ப்பிக்கிறேன்.


No comments:

Post a Comment