Sunday, August 30, 2026

40. நான் ரசித்த சிறுகதைகள்

நான் இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படித்திருப்பேன். பலவற்றை ரசித்திருக்கிறேன். என் மனதில் ஆழமாகப் பதிந்த சில சிறுகதைகளைப் பற்றி இங்கே கூற விழைகிறேன்.

இவை தமிழின் தலைசிறந்த 10 சிறுகதைகள் போன்ற வகைப்பாடுகளுக்குள் வரக் கூடியவை அல்ல. இவற்றை எழுதியவர்களையும், என்னையும் தவிர வேறு யாரும் இந்தக் கதைகளை நினைவில் வைத்திருக்காமல் கூட இருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால், என் மனதில் ஆழமாகப் பதிந்தவை இவை.

இந்தக் கதைகளைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, அவற்றின் சிறப்பாக நான் உணர்ந்தவற்றை விளக்க முயல்கிறேன். இவை என்னைக் கவர்ந்தது போல், இந்தப் பதிவைப் படிப்பவர்களைக் கவராமல் போகலாம். என்னால் இயன்றவரை, இந்தக் கதைகளில் நான் கண்ட சிறப்புகளை எடுத்துச் சொல்ல முயல்கிறேன்.

1. எப்போதும் உள்ளவர்கள் (கல்கி): 

அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற கதையா, அல்லது பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் ஒன்றா என்று சரியாக நினைவில்லை. 70-களின் மத்தியில் வெளிவந்ததாக நினைவு. ஆசிரியரின் பெயர் நினைவில்லை. பிரபலமானவர் அல்ல.

உலகில் பல நாடுகளில் சர்வாதிகாரிகள் செய்த கொடுமைகளைப் பற்றிப் படித்திருக்கிறோம். இன்றைய உலகிலும், சர்வாதிகார ஆட்சி சில நாடுகளில் நடந்துதான் வருகிறது. சர்வாதிகார நாடுகளில், ஆட்சியாளர்களின் அடக்குமுறையையும், கொடுமைகளையும் மீறி, சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கத்தான் செய்யும். 

அப்படி ஒரு சர்வாதிகாரியை எதிர்த்துப் போராடியவர்களைக் கைது செய்து விசாரிக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் அந்த நாட்டு அதிபரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் வாழ்க என்று கூறினால், அவர்களை மன்னித்து விட்டு விடுவதாகவும், அப்படிக் கூறா விட்டால், அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவாரகள் என்றும் காவல் அதிகாரி கூறுகிறார். 

சிலர் உடனேயும். வேறு சிலர் சிறிது தயக்கத்துக்குப் பிறகும் அதிபர் வாழ்க என்று கூறி, விடுதலை பெறுகிறார்கள். ஒருவன் மட்டும் அவ்வாறு கூற மறுக்கிறான். அவன் சுட்டுக் கொல்லப்படுகிறான்.

காவல் அதிகாரியின் அருகில் இருக்கும் இன்னொரு அதிகாரி, "சின்னப் பையன். அநியாயமாக உயிரை விட்டு விட்டானே! அதிபர் வாழ்க என்று சொல்லி இருந்தால், உயிர் பிழைத்திருக்கலாமே!" என்று வருத்ததுடன் கூறுகிறார்.

"இப்படிப்பட்ட சிலர் எப்போதுமே இருக்கத்தான் செய்வார்கள். என்ன செய்வது!' " என்கிறார் காவல் அதிகாரி, அலட்சியத்துடன்.

அவ்வளவுதான் கதை! அவ்வளவுதானா என்கிறீர்களா? அவ்வளவுதான்!

இந்தக் கதையின் தலைப்பு மிகவும் அற்புதமாக அமைந்திருக்கிறது. இந்தக் கதை ஒரு போராளியின் கொள்கைப் பிடிப்பைக் காட்டுவதாகச் சிலருக்குத் தோன்றலாம். 

ஆனால் எனக்கு, கதையின் தலைப்பும், காவல் அதிகாரி இறுதியாகச் சொன்ன வார்த்தைகளும், எத்தகைய அடக்குமுறைகள் இருந்தாலும், சுதந்திரத்துக்காவும், அடக்குமுறைக்கு எதிராகவும் போராடக் கூடிய சிலர் இருப்பார்கள் என்ற சிந்தனை நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. 

'One man with courage makes a majority' என்று ஒரு பொன்மொழி இருக்கிறது. இதுபோல், போராட ஒருவர் இருந்தாலும் போதும், சர்வாதிகாரத்தையும், அடக்குமுறையையும் எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கையை இந்தக் கதை, குறிப்பாகக் கதையின் தலைப்பு கொடுக்கிறது.

2. அப்படிப் பாக்காதேடா, தம்பி! (தினமணி கதிர்)

இதுவும் 70-களில் வெளி வந்த ஒரு சிறுகதைதான். ஆசிரியரின் பெயர் நினைவில்லை.

ஒரு வளையல் வியாபரி. வீடு வீடாகச் சென்று வளை விற்பவர். அவர் ஒரு வீட்டின் முன் பகுதியில் அமர்ந்து அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு வளைகளைக் காட்டிக் கொண்டிருக்கிறார். அந்தப் பெண்களுள் ஒருத்தியின் மகளான ஒரு சிறுமியும் அங்கே இருக்கிறாள். வளை வியாபாரிக்கு உதவியாக ஒரு பையன் அவருடன் வந்திருக்கிறான். 

அவர் பெண்களுக்கு வளைகளைக் காட்டிக் கொண்டிருக்கும்போது, அந்தப் பையன், அந்தச் சிறுமியை அடிக்கடி உற்றுப் பார்க்கிறான். அதை கவனித்த அந்த வியாபாரி, அவனுக்கு மட்டும் கேட்கும்படியாக, 'அப்படிப் பாக்காதேடா, தம்பி!' என்று சொல்கிறார். 

காலம் ஓடி விடுகிறது. அந்தச் சிறுமி வளர்ந்து திருமணமாகிப் புகுந்த வீடு செல்கிறாள். அவள் தன் மகளுடன் பிறந்தகம் வருகிறாள். 

அவர்கள் வீட்டுக்கு ஒரு வளையல் வியாபாரி வருகிறார். அவர் வேறு யாருமல்ல, முன்பு அந்த வீட்டுக்கு வந்த வளையல் வியாபாரிக்கு உதவியாக வந்த அந்தப் பையன்தான்! அவனுக்கு உதவியாக ஒரு பையன் அவனுடன் வருகிறான். 

வளையல் வியாபாரி அந்தப் பெண்ணுக்கு வளையல்களைக் காட்டும்போது, அந்தச் சிறுவன் அந்தப் பெண்மணியின் மகளான சிறுமியை உற்றுப் பார்ப்பதை கவனித்த வளையல் வியாபாரி, அவனிடம் ரகசியமாக, 'அப்படிப் பாக்காதேடா, தம்பி!' என்கிறான்.

இத்துடன் கதை முடிகிறது. 

இந்தக் கதை எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகள் பல.

ஒரே மாதிரியான செய்திகளும், அறிவுரைகளும் எப்படித் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்லப்படுகின்றன என்பதை இந்தக் கதை யதார்த்தமாகக் காட்டுகிறது. 

வளையல் வியாபாரியிடம் உதவியாளனாக இருந்தவன் வளையல் வியாபாரியாக ஆனது ஒருவிதத் திருப்தியை அளித்தாலும், சமூகத்தில் கீழ்ப்படி நிலைகளில் உள்ளவர்களால் குறிப்பிட்ட சில எல்லைகளைத் தாண்டி முன்னேற முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்துகிறது. 

இந்த உலகில் பல நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நடப்பவையாகவே இருக்கின்றனவே என்ற ஒரு சலிப்பையும் இது அளிக்கிறது.

3. சராசரிகள் (கல்கி)

70-களில் வெளியான கதை. ஆசிரியரின் பெயர் நினைவில்லை.

ஒரு கிராமப் பஞ்சாயத்தில் உதவியாளராகப் பணி செய்பவர், மாலை வேலை நேரம் முடிந்ததும், அலுவலகத்தைப் பூட்டி விட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது, ரெவின்யூ இன்ஸ்பெக்டர் சைக்கிளில் வருகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் எவ்வளவு பெருமாள் கோவில்கள், எத்தனை சிவன் கோவில்கள் உள்ளன என்று சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஒரு கேள்வி எழுப்பி இருப்பதாகவும், இந்த விவரங்களைச் சேகரித்து அனுப்புமாறு தலைமைச் செயலர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட, அவர் தாசில்தார்களுக்கும், தாசில்தார்கள் ரெவின்யூ இன்ஸ்பெக்டர்களுக்கும் உத்தவிட்டிருப்பதாகவும், இந்தத் தகவல்கள் தனக்கு அடுத்த நாளுக்குள் வேண்டும் என்று தாசில்தார் கேட்டிருப்பதால், தான் எல்லா பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும் நேரில் சென்று தகவலைத் தெரிவித்து வருவதாகவும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் கூறுகிறார். அந்த பஞ்சாயத்தின் கீழ் வரும் ஊர்களில் உள்ள பெருமாள், சிவன் கோவில்களின் எண்ணிக்கையை மறுநாள் காலை தன் அலுவலகத்தில் வந்து அளிக்கும்படி கூறி விட்டு அவர் சொல்கிறார்.

அந்த உதவியாளர் விவரங்களைச் சேகரித்து, மறுநாள் காலை ரெவின்யூ இன்ஸ்பெகடர் அலுவலகத்தில் அளிக்கிறார். 

குறிப்பிட்ட நேரத்துக்குள் எல்லா பஞ்சாயத்து அலுவலகங்களிலிருந்தும் விவரங்கள் வராததால், ரெவின்யூ இன்ஸ்பெக்டர், கொடுக்கப்பட்ட விவரங்களின் சராசரியைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில், எல்லா பஞ்சாயத்துக்களுமான மொத்த எண்ணிக்கையைக் கணக்கிட்டு, தாசில்தாருக்கு அளிக்கிறார். 

அதேபோல், தாசில்தாருக்கும் எல்லா ரெவின்யூ இன்ஸ்பெக்டர்களிடமிருந்தும் விவரம் வராத்தால், அவரும் சராசரி அடிப்படையில் மொத்த எண்ணிக்கையைக் கணக்கிடுகிறார். சில தாசில்தார்களிடமிருந்து தகவல் வராத்தால், மாவட்ட ஆட்சியரும் இவ்வாறே கணக்கிடுகிறார். சில மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து விவரங்கள் வராததால், தலைமைச் செயலாளரும் சராசரி அடிப்படையில் மொத்த எண்ணிக்கையைக் கணக்கிட்டு அமைச்சரிடம் அளிக்கிறார்.

கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும்போது, கேள்வி கேட்ட உறுப்பினர் அவைக்கு வரவில்லை. அவர் சட்டமன்ற விடுதியில் அமர்ந்து, தனக்கு வேண்டியவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தக் கதையின் தலைப்பு 'சராசரிகள்' நமக்குப் பல செய்திகளச் சொல்கிறது. சராசரி என்ற சொல், பொதுவாக, 'போதுமான அளவு இல்லாத (not good enough, not satisfactory)'  என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. 

எல்லா நிலைகளிலும்  எப்படி சராசரி மனிதர்களே கோலோச்சுகிறார்கள் என்பதை இந்தக் கதையும், அதன் தலைப்பும் அழகாக விளக்குகின்றன. 'சராசரி' என்ற சொல், கேள்வி கேட்ட உறுப்பினருக்கும் பொருந்தும். முதலில் அவர் கேட்ட தகவல் பயனுள்ளதல்ல. ஆனால் இந்தத் தகவலைச் சேகரிக்கப் பலர் தங்கள் உழைப்பையும், நேரத்தையும் செலவழிக்கின்றனர். ஆனால் கேள்வி கேட்டவரிடம்,  தான் கேட்ட கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை.

இது போன்ற சராசரிகளிடம் சிக்கிக் கொண்டு இந்த உலகம் எவ்வாறு திண்டாடுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.

4. அலிசா (ஆங்கிலம்):

 Alexander Dumas-இன் 'Bird of fate and other stories' என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்ற இந்தச் சிறுகதையை இங்கே நான் சேர்க்கக் காரணம், இந்தச் சிறுகதை ஒரு திருக்குறளை விளக்குவதாக அமைந்திருக்கிறது என்பதால்தான்.

இந்தக் கதையின் தலைப்பு எனக்கு நினைவில்லை. இது அலிசா என்ற சிறுமியைப் பற்றியது என்பதால், 'அலிசா' என்பதையே இந்தச் சிறுகதையின் தலைப்பாக்க் குறிப்பிட்டிருக்கிறேன்.

அலிசா ஒரு விறகு வெட்டியின் மகள். அவள் தந்தை விறகு வெட்டக் காட்டுக்குச் செல்லும்போது, அவளும் சில சமயம் உடன் செல்வது உண்டு. 

ஒருநாள் அவள் காட்டுக்குள் தனியாகச் சென்றபோது, அங்கே ஒரு சிங்கத்தைப் பார்க்கிறாள். அந்தச் சிங்கம் அவளுடன் நட்புக் கொண்டு அவளைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு ,அவளை விட்டில் கொண்டு விடுகிறது. அவள் சிங்கத்தின் மீது வருவதை அக்கம் பக்கத்தினர் வியப்புடன் பார்க்கின்றனர். 

சிங்கம் அவளை வீட்டில் விட்டு விட்டுத் திரும்பியதும், அவள் தோழிகள் ஓடி வந்து அவளிடம், "சிங்கத்தின் மீது சவாரி செய்தது எப்படி இருந்தது?' என்று கேட்கின்றனர். "சவாரி நன்றாகத்தான் இருந்தது. ஆனால் சிங்கத்தின் வாயிலிருந்து அடித்த நெடியைத்தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை" என்றாள் அலிசா.

சற்றுத் தொலைவே சென்றிருந்த சிங்கத்தின் காதில் இது கேட்டிருக்கும், போலும். அதன் கர்ஜனை தொலைவிலிருந்து பெரிதாகக் கேட்டது. தான் கூறியது சிங்கத்தின் காதில் விழுந்து, அது கோபம் கொண்டிருக்குமோ என்று அஞ்சினாள் அலிசா. 

சில நாட்களுக்குப் பிறகு, அலிசா காட்டுக்குள் போனாள். அங்கே சிங்கம் இருந்தது. அலிசா அச்சத்துடன் தள்ளி நின்றாள். அங்கே முதல்நாள் அலிசாவின் தந்தை விட்டுச் சென்றிருந்த கோடரி இருந்தது.

சிங்கம் அலிசாவைப் பார்த்து, "அந்தக் கோடரியால் என் தலையில் அடி!" என்றது.

அலிசா அச்சத்துடன் பேசாமல் நின்றாள். 

'இப்போது அதை எடுத்து என் தலையில் அடிக்கப் போகிறாயா, இல்லையா?" என்று கோபமாக்க் கேட்டது சிங்கம்.

அலிசா பயந்து கொண்டே, கோடரியை எடுத்து சங்கத்தின் தலையில் அடித்தாள். அவள் மெல்ல அடித்தாலும், கோடரியின் கூரான முனை சிங்கத்தின் தலையில் பட்டு ரத்தம் கசிய ஆரம்பித்தது. அலிசா பயந்து கொண்டு வீட்டுக்கு ஓடி விட்டாள்.

ஒரு மாதம் கழித்து அலிசா மீண்டும் காட்டுக்குச் சென்றாள். அங்கே சிங்கம் இருந்தது. 

அலிசாவைப் பார்த்ததும், சிங்கம், "என் தலையில் பட்ட காயம் ஆறி விட்டதா என்று பார்"  என்று தன் தலையைத் தாழ்த்திக் காட்டியது.

வெட்டுக் காயம் ஆறி, அதன் வடு, தலையில் நடு வகிடு எடுத்து போல், ஒரு கோடு போல் தெரிந்தது. ('சிங்கத்தின் பிடரியில் கோடு மோல்தெரிவது இந்த வடுதான்' என்று ஆசிரியர் எழுதி இருப்பது, 'அணிலின் முதுகில் தெரியும் கோடுகள் அணை கட்ட மணல் எடுத்து வந்து உதவிய அணிலின் முதுகில் ராமர் தடவிக் கொடுத்ததால் ஏற்பட்டவை' என்று நம் நாட்டில் கூறப்படும் கதையை நினைவுபடுத்துகிறது.)

"ஆறி விட்டது" என்றாள் அலிசா, பயந்து கொண்டே.

"ஆனால் என் வாயிலிருந்து வரும் நெடி பற்றி நீ கூறயது என் மனதில் ஏற்படுத்திய காயம் இன்னும் ஆறவில்லையே, அலிசா!" என்றது சிங்கம். 

தன் மகளைத் தேடிக் காட்டுக்கு வந்த விறகுவெட்டியால் அங்கே சில எலும்புத் துண்டுகளைத்தான் காண முடிந்தது.

இந்தக் கதை,


'தீயினால் சுட்ட உண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு'

என்ற குறளுக்கு விளக்கமாக அமைந்திருப்பது போல் தோன்றுகிறது அல்லவா?





No comments:

Post a Comment