Wednesday, May 16, 2018

30. பத்ரிநாத் யாத்திரை 6 - இந்தியாவின் கடைசி டீக்கடை!


4.5.18 அன்று காலை சுமார் 11 மணிக்கு பத்ரிநாத் வந்தடைந்த நாங்கள் பத்ரிநாராயணனை தரிசனம் செய்து விட்டு, மதிய உணவுக்குப் பின் இந்தியாவின் எல்லையோர கிராமமான, இந்தியாவின் கடைசி கிராமம் என்று அழைக்கப்படும் மாணா கிராமத்துக்குச் சென்றோம்.


இந்திய திபெத் எல்லையான மாணா கணவாயிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கிராமம்



பத்ரிநாத்தி;லிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வேனில் சென்று மாணா கிராமத்தின் நுழைவாயிலுக்குச் சற்று முன் இறங்கிக் கொண்டோம்.




மாணா கிராமம் இந்திய ராணுவத்தால் பராமரிக்கப் படுகிறது. பனிமூடும் காலமான நவம்பர் முதல் ஏப்ரல் வரை இங்கு வசிக்கும் மக்கள் கீழே உள்ள ஊர்களுக்குச் சென்று விடுவார்கள், ராணுவ வீரர்கள்  மட்டும் பாதுகாப்புப் பணிக்காக  இங்கேயே தங்கி இருப்பார்கள்.










மாணா கிராமத்தில் நடந்து செல்லும்போது, பனி மூடிய சிகரங்கள் கொண்ட மலைகளையும், கீழே பள்ளத்தாக்கில் ஓடிக்கொண்டிருக்கும் அலகனந்தாவின் அழகிய தோற்றத்தையும்  பார்த்துக் கொண்டே செல்லலாம்.



















சற்று தூரம் சென்றதும் சாலை  Y போல் இரண்டாகப் பிரிகிறது. இடது பக்கச் சாலையில் சென்றால் சரஸ்வதி நதி துவங்கும் இடத்துக்குச் செல்லலாம். வலது புறத்தில் அமைந்திருக்கும் மேல்நோக்கிச் செல்லும் சாலை, கணேஷ் குகை, வியாசர் குகை ஆகிய இடங்களுக்கு நம்மை இட்டுச் செல்லும்

மலையின் மேலிருந்து மிகுந்த ஓசையுடன் நீர்வீழ்ச்சியாகக் கொட்டும் இடம்தான் சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானம் என்று கூறப்படுகிறது. இதன் அருகே சரஸ்வதி தேவிக்கு ஒரு சிறிய கோவிலும் இருக்கிறது.

இங்கு உற்பத்தியாகும் சரஸ்வதி நதி அருகில் ஓடும் அலகனந்தாவில் கலந்து மறைந்து விட்டதாகக் கருதப்படுகிறது. நதியின் ஓசை அருகில் உள்ள ஆசிரமத்தில் இருந்த வியாசருக்கு இடைஞ்சலாக இருந்ததால், அவரது சாபத்தால் சரஸ்வதி நதி துவங்கிய இடத்துக்கு அருகிலே அலகனந்தாவில் கலந்து விட்டது என்பது ஒரு புராண வரலாறு.







அதன்பிறகு அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் வரை சரஸ்வதி நதி கங்கைக்குள்ளேயே கண்ணுக்குத் தெரியாத நீரோட்டமாகச் செல்கிறது என்பது நம்பிக்கை. ஆனால் சரஸ்வதி நதி அலகாபாத் வரை ஓடியிருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில், சரஸ்வதி நதியின் பாதை குறித்து ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த இடம் மிக மிக ரம்மியமானது. நீர்வீழ்ச்சியால் ஏற்படும் குளிர்ச்சி, அங்கு
வீசம் மலைக்காற்றின் குளிர்ச்சி இரண்டும் சேர்ந்து மிகவும் சுகமாந உணர்வை அளிக்கின்றன. உட்கார்ந்து ஓய்வெடுக்க சரஸ்வதி கோவில் அருகே சிறிய இடம் இருக்கிறது. அருகில் டீ, காப்பி, குளிர்பானம், பிற சிற்றுண்டிகள் விற்கும் ஓரிரு கடைகளும் இருக்கின்றன.

இதற்கு அருகிலேயே பாறைகளுக்கு நடுவே கிணறு போன்ற ஒரு பள்ளம் இருக்கிறது. இது பீம் புள் (பீமன் குட்டை) என்று அழைக்கப்படுகிறது. பீமன் புனித நீராடிய இடம் இது. மற்ற பாண்டவர்கள் நீராடிய இடங்களும் அருகில் இருப்பதாகச் சொன்னார்கள்.

இங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் வசுதாரா என்ற நீர்வீழ்ச்சி இருக்கிறது. ஆயினும் நாங்கள் அங்கு செல்லவில்லை.

திரும்பி வரும் வழியில் இன்னொரு சாலையில் இருக்கும் கணேஷ் குகை, வியாசர் குகை ஆகிய இடங்களுக்குச் சென்றோம். கணேஷ் குகையில்தான் விநாயகர் அமர்ந்து வியாசர் சொன்ன மகாபாரதத்தையும் மற்ற புராணங்களையும் எழுதினர் என்று கூறப்படுகிறது.





























கணேஷ் குகைக்கு அருகிலேயே,  இன்னும் சற்று  உயரமான இடத்தில்  வியாசர் குகை இருக்கிறது.

வியாசர் இங்கு அமர்ந்தபடியே மகாபாரதத்தையும், மற்ற புராணங்களையம் தம் வாய்மொழியாகக்  கூறியதாகவும், விநாயகர் தன் குகையில் அமர்ந்தபடியே  அவற்றை எழுதியதாகவும் கூறப்படுகிறது. இந்த  இரண்டு குகைகளிலும் தற்போது இருவர் அமர்ந்து இந்த விவரங்களை இங்கு வருபவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.























வியாசர் தன் குகையில் அமர்ந்து புராணங்களைக்  கூறிக்
கொண்டிருந்தபோதுதான் அருகிலிருந்த சரஸ்வதி நதியின் பெரும் ஓசை தமக்குத் தொந்தரவாக இருப்பதாகக் கருதி சரஸ்வதி நதியை மறையும்படி சபித்து விட்டார்.












வியாசர் குகைக்கு அருகே ஒரு டீக்கடை இருக்கிறது.
அந்தக் கடையின்
பெயர்ப்பலகையில் 'இந்தியாவின் கடைசி டீக்கடை' என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும்  இதே வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த டீக்கடை உரிமையாளர் ஒரு தமிழரா என்று தெரியவில்லை!

பாண்டவர்கள் பத்ரிநாத்தைக் கடந்து மாணா கிராமம் வழியே நடந்துதான் ஒவ்வொருவராக இயற்கை எய்தி  சொர்க்கத்துக்குப் போனார்கள் என்று கூறப்படுகிறது.

இந்திய திபெத் எல்லையில் உள்ள இந்தியாவின் கடைசி கிராமமான மாணாவில் கால் பதித்து நடந்து சரஸ்வதி நதி உற்பத்தியாகும் இடம், பீமன் குட்டை, கணேசர் குகை, வியாசர் குகை போன்ற அருமையான இடங்களைப் பார்த்து விட்டு, வேன்கள் நிறுத்தப்படும் இடத்துக்கு வந்து வேனில் ஏறி விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

ஜோஷிமத் முதல் மாணா வரை நான் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை ஒரு வீடியோவாக்கி கூககுள் தாத்தா (Google Photos) எனக்குப் பரிசாக வழங்கியிருக்கிறார்! இதோ அந்த வீடியோ.











No comments:

Post a Comment