Tuesday, April 7, 2015

5. இன்று முதல்

இந்த வலைப்பதிவைத் துவக்கியபோது, தினமும் ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்துத்தான் துவங்கினேன். ஆனால் ஒன்பது மாதங்களில் மூன்றே பதிவுகளைத்தான் செய்திருக்கிறேன். 269 நாட்களில், 266 நாட்கள் எழுதத் தவறி விட்டேன் என்பது என்வரையில் ஒரு கடுமையான தவறு.

எழுதாதற்குக் காரணங்களைக் கூற விரும்பவில்லை. இதை அப்படியே விட்டு விடலாமா என்று நினைத்தேன். பிறகு எப்போதெல்லாம் எழுத முடிகிறதோ அப்போதெல்லாம் எழுதுவது என்று தீர்மானித்தேன். இன்று இதைப்பற்றி எழுதியே பக்கத்தை நிரப்பி விடப் போகிறேன்!

நாம் ஆரம்பிக்கும் பல செயல்களில் இது போன்று தொய்வோ  இடைவெளியோ ஏற்படுவது என்பது பலருக்கும் நிகழ்கிற அனுபவம்தான். (என் தவறைச் சிறிதாகக் காட்டும் நோக்கத்துடன்,  'நான் மட்டும்தான் இப்படிச் செய்கிறேனா, பல பேர் இப்படித்தானே செய்கிறார்கள்?' என்று வாதம் செய்வதற்காக இதைச் சொல்லவிலை என்பதை அடுத்த வரியைப் படிக்கும்போது நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்!)

இவ்வாறு ஒரு இடைவெளி ஏற்படும்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். 'இன்று முதல் என் செயலை மீண்டும் தொடங்குவேன்' என்று தீர்மானம் செய்து கொண்டு மீண்டும் அதைச் செய்யத் தொடங்குவதுதான் ஆக்கபூர்வமான வழி. எத்தனை முறை இது போல் தொய்வு ஏற்பட்டாலும், 'இன்று முதல்' என்று தொடரலாம்.

நான் செய்ததைப்போல் இவ்வளவு நாட்கள் செய்யாமல் இருந்து விட்டோமே என்று கணக்குப் போட்டுப் பார்த்து விட்டு நம்மையே நொந்து கொள்வதை விட, மீண்டும் துவங்குவது எளிது, பயனுள்ளது.

நான் சிறுவனாக இருந்தபோது பக்கத்து ஊரில் இருந்த டூரிங் படக்கொட்டகையில், படத்தை மாற்றும்போது இன்று முதல் என்று சுவரொட்டியில் அச்சிட்டிருப்பார்கள். படம் இரண்டு நாட்களுக்கு முன்பே மாறி இருக்கலாம். ஆனால் சுவரொட்டியை நான் இன்று தான்  பார்க்கிறேன் என்றால், என்னைப் பொறுத்தவரை, அந்தப் படம் 'இன்று முதல்' தான் ஓடுகிறது என்றுதான் கொள்வேன்.

அதுபோல், எந்த ஒரு பழக்கத்தையும் தொடர முடியாமல் போய் மீண்டும் தொடங்கும்போது இன்றுதான் தொடங்குகிறோம் என்பது போல் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் தொடங்கலாம்.

இந்த 'இன்று' என்ற வலைப் பதிவை இன்று மீண்டும் தொடங்குகிறேன்!



No comments:

Post a Comment