Wednesday, April 8, 2015

6. விபத்திலிருந்து தப்பிய பின்

இன்று ஒரு விபத்திலிருந்து தெய்வாதீனமாகத் தப்பினேன். தெய்வாதீனம் என்று சொல்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று என் இரு சக்கர வாகனம்  ஒரு காரின் மீது மோதித் தள்ளப்பட்டபோது கீழே விழாமல் வண்டியைச் சற்று தூரம் ஓட்டிப்போய் நிறுத்தியது எப்படி என்பது எனக்கே விளங்கவில்லை. இன்று நிச்சயம் அடிபடப் போகிறேன் என்று நினைத்த பிறகு இது நிகழ்ந்தது அதிசயம்தான்.

இரண்டாவது காரணம் பொதுவாக வண்டி ஓட்டிச் செல்லும்போது நான் எப்போதும் செய்வதுபோல் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக்கொண்டு போனேன். (ஒரு வேளை வண்டி ஓட்டும்போது விபத்து ஏற்பட்டு நான் இறக்க நேரிட்டால் எனக்கு வைகுண்டப் பதவி நிச்சயம் என்று அவ்வப்போது விளையாட்டாக நினைத்துக் கொள்வது உண்டு.) இன்று வைகுண்டத்திலிருந்து  அழைப்பு வந்து, பிறகு அது கடைசித் தருணத்தில் திரும்பப் பெறப்பட்டதாகத் தோன்றியது!)

விபத்து எப்படி நிகழ்ந்தது? ஒரு சிக்னலில்  நான் வலது புறம் திரும்பிக்கொண்டிருந்தபோது எனக்கு முன்னே சென்று கொண்டிருந்த கார் நான் எதிர்பாராமல் பின்புறம் திரும்பியபோது (U- டர்ன் எடுத்தபோது) பின்னே வந்த நான்  காரில் பக்கவாட்டில் மோத நேர்ந்தது..

ஒரு வழியாகச் சமாளித்துச் சற்று தூரம் வண்டியை ஓட்டி நிறுத்திய பிறகு திரும்பிப் பார்த்தேன்.  கார் எனக்குச் சற்றுப் பின்னால் நின்று கொண்டிருந்தது. சுற்றியிருந்த மற்ற வாகன ஓட்டிகள் எதுவும் பேசாமல் இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. என் அருகில் நின்ற இரு சக்கரப் பயணி மட்டும் கார்க்காரரை மெல்லிய குரலில் எனக்கு மட்டும் கேட்கும்படி குறை கூறினார்.

சில வினாடிகளுக்குப் பின் காரை ஓட்டியவர் இறங்கி வந்து, "நான் இன்டிகேடர் போட்டுத்தானே வந்தேன்? நீங்கள் ஏன் என் மீது மோதினீர்கள்?" என்றார். "நீங்கள்தான் சற்றும் எதிர்பாராமல்  திரும்பினீர்கள்" என்றேன் நான். "காரை ரிப்பேர் செய்ய ஐயாயிரம் ரூபாய் செலவாகுமே, அதை யார் கொடுப்பார்கள்?" என்றார் அவர். "என் வண்டி எந்த அளவுக்குச் சேதம் அடைந்திருக்கிறது என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்" என்றேன் நான். மனதுக்குள், 'நான் கீழே விழுந்து எனக்கு அடிபட்டிருந்தால் உங்கள் நிலைமை என்ன ஆகியிருக்கும்?' என்று நினைத்துக் கொண்டேன். பிறகு அவர் போய் விட்டார்.

பொதுவாக இதுபோன்ற விபத்துகளின்போது  நாம் மற்றவர்களைக் குறை கூறுவது இயல்பு. அதனால், 'நான் ஏதாவது தவறு செய்திருப்பேனோ?' என்று யோசித்துக்கொண்டே வந்தேன். விபத்து நடந்ததற்கான முக்கிய காரணம் ஒரு வாகனம் வலது பக்கம் திரும்புமா அல்லது  பின்புறமாகத் திரும்புமா (U-டர்ன்) என்பதில் ஏற்படும் குழப்பம்தான் என்று தோன்றியது.

பல சிக்னல்களில் வலது புறம் திரும்ப முயலும் வாகனங்களுக்கும், பின்புறம் திரும்ப முயலும் வாகனஙளுக்கும் இடையே நடக்கும் இழுபறியைப் பார்த்திருக்கிறேன். சிக்னலில் போகுவரத்து அதிகம் இருக்கும்போது எல்லா வாகனங்களும் மெதுவாக  ஊர்ந்து செல்லும்போது இது போன்ற விபத்துக்கள் தவிர்க்கப்படும். போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும்போது, வாகனங்கள் சிக்னல் விளக்கு மாறுவதற்குள் அவசரமாகக் கடக்க முயலும்போது இதுபோன்ற விபத்துக்கள் நிகழ வாய்ப்புக்கள் அதிகம்.

சிக்னலில் வலது புறம் திரும்ம்ப முயல்பவர்கள், சில வாகனங்கள் எதிர்பாராத விதமாகப் பின்புறம் திரும்ப முயலும் வண்டிகளிடம் கவனமாக இருப்பது பாதுகாப்பானது.

No comments:

Post a Comment