Thursday, April 9, 2015

7. காலம் மாறிப் போச்சு!


மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற தத்துவம் புளித்துப் போகும் அளவுக்குப் பேசப்பட்டு விட்டது.

மாற்றத்தைத் தவிர, மாறாத இன்னொரு விஷயம் உண்டு. 'காலம் மாறி விட்டதே' என்று ஒவ்வொரு தலைமுறையும் புலம்பும் பழக்கம்தான் அது. காலம் மாறும் என்பதை நம் நாட்டின் புராணங்களும், இதிகாசங்களும் அறுதியிட்டுச் சொல்லியிருக்கின்றன. ஒவ்வொரு யுகத்திலும் நல்லவை தேய்ந்து அல்லவை பெருகி, கலி யுகத்தில் இது உச்சக்கட்டத்தை எட்டும் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருப்பது,  புராணம் படிக்காதவர்களுக்கும் நன்கு தெரியும். இந்தப் புராணத்தைத்தான் பலரும் பாடிக் கொண்டிருக்கிறார்களே!

'காலம் மாறிப்போச்சு' என்று ஒரு படம் சுமார் அறுபது வருடங்களுக்கு முன் வெளி வந்தது. ஜெமினியின் தயாரிப்பில் வெளி வந்த இந்தப் படத்தில் ஜிக்கி பாடிய 'ஏரு பூட்டிப் போவாயே' என்ற பாடல் மிகப் பிரபலமானது. இந்தப் பாடல் காட்சியில் பிரபல இந்தி நடிகை வஹிதா ரஹ்மான் நடித்திருக்கிறார் என்பது சிலருக்கு வியப்பான செய்தியாக இருக்கும். அவர் செங்கல்பட்டில் பிறந்தவர் என்ற (Youtube-இல் ஒருவர் குறிப்பிடப்பட்டிருக்கும்) செய்தி அதை விட ஆச்சரியமாக இருக்கும். இந்தப் பாடல் காட்சியின் காணொளி இணைப்பு இதோ.



இதை நான் குறிப்பிடுவதற்குக் காரணம் காலம் மாறிப் போச்சு என்ற பேச்சு எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாகத்தான். 1996-இல் இதே பெயரில் இன்னொரு தமிழ்ப் படம் வெளியானது. காலம் மாறினாலும், திரைப் படங்கள் எடுக்கப்படும் விதம் மாறினாலும், டைட்டில் மட்டும் மாறவில்லை!

நம் வாழ்க்கை வசதிகளில் குறிப்பாக திரைப்பட இசையில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் வந்திருக்கின்றன என்பதைப் பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாஸ் தயாரித்திருக்கும் சிறகடிப்பேன் என்ற ஆல்பத்தில் 'காலம் மாறிப்போயாச்சே' என்ற பாடலில்  ஒரு தாத்தாவாக அந்தக் கால இசை அமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனும் அவரது பேத்தியாக இன்றைய பின்னணிப் பாடகி ஸ்ரீஷாவும் பாடல் மூலம் பகிர்ந்து கொள்வதை இந்தக் காணொளியில் காணலாம்.



காலம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது, நாமும் மாறிக்கொண்டுதான் இருக்கிறோம். அப்புறம் ஏன் காலம் மாறிப் போய் விட்டது என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம்?

இதற்கு ஒரு காரணம் உண்டு. சாதாரண மனிதர்கள் 'காலம் மாறிப் போச்சு' என்று சொல்வதில்லை, 'காலம் கெட்டுப் போய் விட்டது' என்றுதான் சொல்வார்கள்.

உண்மையிலேயே காலம் கெட்டு விட்டதா? இதைப் பற்றி நாளைய 'இன்று'வில் பார்க்கலாமே!

No comments:

Post a Comment